×

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

 

மன்னார்குடி  அருகே காதல் திருமணத்திற்கு பெண் தரப்பு  எதிர்ப்பு  காதல் ஜோடியினர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் திரிசங்கு. இவரது மகன் பாரதிராஜா(வயது 25). இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில்  வேலை பார்த்து வந்தார். இவரது உறவினர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தலைஞாயிறு காடாங்சேத்தி  கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகள் நிஷா (வயது 17) நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வந்தார்.

உறவினர்களான பாரதிராஜா மற்றும் நிஷா ஆகிய இருவரும்  இரண்டு ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர். நிஷாவிற்கு  இன்னும் திருமண வயது வராததால் அவரது வீட்டில் காதலை கண்டித்துள்ளனர். இதனால் நிஷா வேதாரண்யத்தில் இருந்து பாரதிராஜாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கு பெற்றோர்கள் வீட்டிற்குள் அனுமதிக்காததால் காதல் ஜோடி இருவரும் பருத்திக்கோட்டை சடையகுளம் அருகே உள்ள மரத்தில் தனித்தனியாக தூக்குமாட்டி  தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வடுவூர்  போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் பிரேதங்களை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமண வயதை எட்டுவதற்குள் காதலித்து பெற்றோர்களின் சம்மந்தமில்லாததால் காதல் ஜோடியினர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.