×

மோடிக்கு முருகப்பெருமான் புகைப்படம் பரிசளிப்பு..! 

 

டெல்லியில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.டில்லியில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷணன் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவர் ராதாகிருஷ்ணனை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பிறகு அவரது இல்லத்தில் உள்ள பூஜை அறையில் வழிபாட்டிலும் ஈடுபட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி சுவாமி படங்களுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு, முருகப்பெருமானின் புகைப்படத்தை சிபி ராதாகிருஷ்ணன் பரிசளித்தார்.

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும்.

அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.