“அது மட்டும் வந்திருச்சுனா… நிச்சயமா மறுபடியும் லாக்டவுன் போடுவோம்”- அமைச்சர் பகீர் தகவல்!
சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒரு விஷயம் குறிப்பிட்டார். அதாவது கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாவின் தீவிரம் எப்படி இருந்ததோ அதே தீவிரத்துடன் தற்போது கொரோனா பரவிவருவதாகக் கூறினார். கவனிக்கக் கூடிய விஷயமாக அனைவரும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்… இல்லையென்றால் என க் வைத்து பேசினார்.
இச்சூழலில் நேற்று தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை. வழக்கம் போல சென்னையில் தான் அதிகம். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் கோர தாண்டவம் ஆரம்பித்துவிட்டது. அங்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் தமிழகத்திலும் ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை இந்தக் கேள்வியைச் செய்தியாளர்கள் எழுப்பிவருகின்றனர். அமைச்சர் க. பாண்டியராஜனிடமும் இக்கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதால் தமிழகம் வெகு கவனமாக இருக்க வேண்டும்.
விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. நமக்கு தேர்தல் முக்கியம்; பரப்புரை முக்கியம் தான். ஆனால், அவை எல்லாவற்றையும்விட உயிர் தான் முக்கியம். அதிகாரிகள் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கின்றனர். கொரோனா பரவல் இரண்டாம் அலை தமிழகத்தில் ஏற்பட்டால் வேறு வழியே கிடையாது, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்றார்.