×

"முன் விடுதலை கோர ஆயுள் கைதிகளுக்கு உரிமையில்லை" - ஹைகோர்ட் கருத்து!

 

சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் 5 ரிமாண்ட் கைதிகளை வெடிகுண்டு வீசிக் கொலை செய்த வழக்கில், ஐந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மூர்த்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சூழலில் 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 

இதனடிப்படையில் மூர்த்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயசந்திரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரச தரப்பில், ''மனுதாரரின் கணவர் மத்திய அரசின் வெடிபொருள் சட்டத்தின் கீழும் தண்டனை பெற்றுள்ளார். இச்சட்டத்தின் கீழ் தண்டனை பெறாதவர்களைத் தான் முன்கூட்டிய விடுதலைக்குப் பரிசீலிக்க முடியும்” எனக் கூறப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ''மனுதாரர் 17 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ளார். 5 ஆயுள் தண்டனை என்றாலும், ஏககாலத்தில்தான் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்கூட்டிய விடுதலை கோர முடியும்'' என வாதாடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாகக் கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலத்திற்கானது. இதில் முன்கூட்டிய விடுதலை என்பது சட்டத்திற்கு உட்பட்ட அரசின் முடிவைச் சேர்ந்தது” என்று குறிப்பிட்டனர்.