×

'லீ ராயல் மெரிடியன்' ஹோட்டல் தொழிலதிபர் பழனி பெரியசாமி வசமானது

 

லீ  ராயல் மெரிடியன் ஹோட்டல்ஸ் நிர்வாகத்தை மீண்டும் தொழிலதிபர்  பழனி பெரியசாமி வசமே ஒப்படைத்து சென்னையில் உள்ள தேசிய  கம்பெனிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாய கிளை இறுதி தீர்ப்பளித்துள்ளது.

தொழிலதிபர்  பழனி பெரியசாமி  கவுண்டருக்கு சொந்தமான அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், சென்னை மற்றும் கோவையில் லீ மெரிடியன் ஹோட்டல்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், இந்திய சுற்றுலாக் கழகத்திற்கு கொடுக்க வேண்டிய 18 கோடி ரூபாயை செலுத்த கால அவகாசம் வழங்கியும் செலுத்தாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் சமர்ப்பித்த 423 கோடி ரூபாய் மதிப்புள்ள கையக்கப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளை ஒப்புதல் அளித்தது.

இதனை எதிர்த்து அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்  பழனி பெரியசாமி  கவுண்டர் தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மனுவை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்கும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்து உத்தரவை எதிர்த்து எம்ஜிஎம் ராஜகோபாலன் தாக்கல் செய்த மேல் முறையீடு  மனு மற்றும் அதன் பின்னர் சீராய்வு மனுவையும்   உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது .

இதையடுத்து கம்பெனிகள் மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் சஞ்சீவ் ஜெயின்,தொழில்நுட்ப உறுப்பினர் வெங்கட்ராமன் சுப்ரமணியன் ஆகியோர் அமர்வு முன்பு,  கடனை திரும்ப செலுத்துவதற்கான திட்டம்  தொழிலதிபர் பழனி பெரியசாமி கவுண்டர் தரப்பில் வழங்கப்பட்டது. கலைப்பு அதிகாரியையும் திரும்ப பெற வேண்டும் என்றும் நிர்வாகத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஎம் ராஜகோபாலன் தரப்பில்  இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, தங்களால்தான் அந்த நிறுவனத்தை நடத்த முடியும் என்றும்,தொழிலதிபர் பழனி பெரியசாமி கவுண்டரால் கடனை செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது.அனைத்து தரப்பு வாதத்ததை கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள் எம்ஜிஎம் ராஜகோபாலன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.நிறுவன கலைப்பாளரை திரும்ப பெற உத்தரவிட்டு, கடனை திரும்ப செலுத்துவதற்கான திட்டத்தை  ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் லீ  ராயல் மெரிடியன் ஹோட்டல்ஸ் நிர்வாகத்தை மீண்டும் தொழிலதிபர்  பழனி பெரியசாமி கவுண்டர் வசமே ஒப்படைத்து  இறுதி தீர்ப்பளித்துள்ளனர். 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள லீமெரிடியன் ஹோட்டல்ஸ் சொத்தை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம்  423 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தததும் அந்த நடவடிக்கைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.