விவசாயிகளுக்கான நில வாி வசூல் ரத்து
விவசாயிகள், நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயர் காலத்து நிலவரி வசூல் 1436-ஆம் பசலி ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வருவாய்த் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதன்படி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலவரி வசூல் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கூறினார். ஆங்கிலேயா் காலத்தில் கொண்டுவரப்பட்ட நில வாியே இனி இருக்காது. அனைத்து நிலவாி வசூலும் ரத்து என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக சென்னையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். கிராம நத்தம் காலி மனைகளில் வீடுகட்டி வசித்துவரும் தகுதிவாய்ந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு பட்டா வழங்க சிறப்புத் திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது. ரூ. 25 கோடியில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் மேம்படுத்தப்படும். 12,466 கிராம நிர்வாக அலுவலர்கள் 1,253 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்படும்” என்றார்.