முன்னாள் அமைச்சர் மீதான நில மோசடி வழக்கு - சிபிசிஐடி சோதனை
கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலி சான்றிதழ் கொடுத்து ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தன்னை மிரட்டி பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நகர போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.
இதேபோல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கில் கரூரில் 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில், கரூரில் உள்ள யுவராஜ், ரகு, செல்வராஜ் மற்றும் மாரப்பன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.