×

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பதவியேற்பு

 

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பதவியேற்றுக்கொண்டார். 

கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதில், விக்டோரியா கவுரி, லட்சுமி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. அதில், வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, கடந்த 07ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன் இன்று பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது.