குளித்தலை: மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை குத்திக்கொன்ற கணவன்..!!
கரூரில் மருத்துவனையில் சிகிச்சைபெற்றுவந்த மனைவியை, கணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விஷ்ரூத் - ஸ்ருதி தம்பதி. தனியார் டிரைவராக பணியாற்றிவரும் வித்ரூத்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், விஷ்ரூத் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஸ்ருதியை, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மனைவியை பார்க்க விஷ்ரூத் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி ஸ்ருதியை கண்மூடித்தனமாக குத்தியுள்ளார். இதில் 3 இடங்களில் கத்திக்குத்து பட்ட ஸ்ருதி பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அத்துடன் வித்ரூத்தும் மனைவியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த சம்பவத்தை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கணவர் விஷ்ரூத்தை தேடி வருகின்றனர்.