சாத்தான்குளம் விவகாரம்: சி.பி.ஐ வேண்டாம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும்! – காங். தலைவர் வலியுறுத்தல்
சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டாம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். காவல்துறையினர் செய்த குற்றங்களைப் பாதுகாக்கிற வகையில் சிபிஐ விசாரணை அமைந்துவிடக் கூடாது. ஏற்கெனவே தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக சிபிஐ விசாரணையின் மூலம் ஒரு குற்றவாளி மீது கூட வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மிகவும் மந்தமான முறையில் குற்றவாளிகளைப் பாதுகாக்கிற வகையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
எந்தக் குற்றத்தையும் செய்யாத வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்குக் காரணமான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும். காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் சிறைக்காவலுக்கு உத்தரவிட்ட சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவர் ஆகியோர் தங்களது பணியிலிருந்து கடமை தவறிய காரணத்தால் அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.