×

"ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இன்னொரு உயிர் பலி" - தினகரன் வேதனை!!

 

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இன்னொரு உயிர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை பொருட்காட்சியில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் காளிமுத்து  நேற்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு படுகாயம் அடைந்தார்.  ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்த நிலையில்,  விரக்தி காரணமாக தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இன்னொரு உயிர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் காளிமுத்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.இந்த சூதாட்டத்தால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? சட்டம் கொண்டுவருவதற்கு குழு அமைத்தார்கள்; அவர்களும் அறிக்கை கொடுத்துவிட்டார்கள். எப்போது இதற்கான தீர்வு காணப் போகிறார்கள்? இனியும் தாமதம் வேண்டாம். உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.