×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு சிறையில் உடல்நலக்குறைவு!

 
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு கூடலூர் கிளை சிறையில் இருந்த கனகராஜின் உறவினர் ரமேஷுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக அழைத்து செல்லபட்டார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 2 மாத காலமாக கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய திருப்பமாக கொலை, கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த மாதம் போலிசார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள நிலையில் தனபாலை 11-வது குற்றவாளியாகவும் ரமேஷை 12-வது குற்றவாளியாகவும் தனிப்படை போலீசார் சேர்த்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கான சதி திட்டம் தெரிந்திருந்தும் போலீஸ் விசாரணையின் போது மறைத்தது, சாட்சிகளை அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கூடலூர் கிளை சிறையில் இருந்து வந்த நிலையில் ரமேஷ்க்கு இன்று(15-11-21) மாலை திடீரேன உடல் நல குறைவு ஏற்பட்டது. 

சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கபட்டதை அடுத்து போலிசார் அவரை கூடலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் உதகைக்கு அழைத்து வந்து தலைமை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் போதிய வசதி இல்லாததால் ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கபட்டார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.