மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு..! விசாரணையை தீவிரப்படுத்திய தவெக அரசு!
சட்டவிரோதக் கிட்னி விற்பனை மற்றும் முறைகேடு வழக்கைக் கையில் எடுத்துள்ள தவெக அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக “சிறுநீரக முறைகேடு” என அழைக்கப்பட்ட இச்சம்பவத்தைத் தவெக அரசு “கிட்னி திருட்டு” எனப் பெயர் மாற்றி, எவ்விதக் தயவுமின்றி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்த இந்தச் சம்பவத்தில், இடைத்தரகர்கள் மூலம் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை தருவதாகக் கூறிச் சிறுநீரகங்களை எடுத்துக்கொண்டு சொற்பத் தொகையை மட்டும் வழங்கி மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைகள் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக, இதில் தொடர்புடைய ஒரு மருத்துவமனை திமுக எம்.எல்.ஏ மற்றும் முக்கிய நிர்வாகிகளின் குடும்பத்தினருடன் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், வழக்கு விசாரணையை மூடிமறைக்க முயற்சி நடப்பதாகக் கடும் சர்ச்சைகள் வெடித்தன.
இந்நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் விளக்குகையில், “கிட்னி திருட்டு விவகாரத்தில் குற்றப்பத்திரிகைகள் தயார் செய்யப்பட்டு நாமக்கல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். மேலும், இந்தச் சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களின் உரிமங்களை ரத்து செய்யத் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் தலையீடுகள் இன்றி வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தவெக அரசு நீதிமன்றம் மூலம் முறையான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநில விவசாயிகள் சிலரிடமும் தமிழக மருத்துவர்கள் மற்றும் புரோக்கர்கள் இத்தகைய கிட்னி திருட்டில் ஈடுபட்டதாக எழும் கூடுதல் புகார்கள் குறித்தும் சிறப்பு விசாரணைக் குழு (SIT) மூலம் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பிரபல மருத்துவர்கள் மீதான பிடி இறுக்கப்பட்டு வருவதால் தமிழக அரசியலில் மீண்டும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.