கிட்னி திருட்டு விவகாரம்- விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதி ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதிகள் விசாரணைக்கு வந்தது. தென் மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் சிறப்பு குழுவை நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி, விசாரணை குறித்து அறிக்கையை, சீலிட்ட கவரில்,தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்
அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜராகி இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பிளாக் செய்து வைத்துள்ளார்கள். எனவே முதல் தகவல் அறிக்கை நகலை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரருக்கு, இந்த வழக்கின் FIR நகலை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர் . பிளாக் செய்ததை நீக்கவும் உத்தரவிட்டனர். மேலும் விசாரணைக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.