×

கேரளாவில்  படகு கவிழ்ந்த விபத்து - சீமான் இரங்கல் 

 

கேரளாவில் படகு கவிழ்ந்து 20ற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் உள்ள கடற்கரையில்விடுமுறை தினமென்பதால் 2 அடுக்கு கொண்ட சுற்றுலா படகில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த படகு திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சுமார் 23 பேர் பலியாகியுள்ளனர். காணாமல் போன மற்றவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள தூவல் தீரம் பகுதியில்  சுற்றுலாப்பயணிகள்  பயணித்தப் படகு கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கேரள மக்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.



இந்திய ஒன்றிய அரசும், கேரள மாநில அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்பு நிதியினை வழங்குவதோடு, இவ்விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், பெரும்பாலான மக்கள் கூடுகின்ற இதுபோன்ற சுற்றுலாத்தலங்களில் அந்தந்த மாநில அரசுகள் அனைத்துவகை பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்து, குறைபாடுகளைக் களைந்து, முறைப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.