×

"பாதுகாப்பா இருந்தும் தாக்கிடுச்சு”... கீர்த்தி சுரேஷுக்கும் கொரோனா - ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்!

 

இந்தியா முழுவதும் 3ஆம் அலை வேகமெடுத்து வருகிறது. முதல் இரண்டு அலைகளில் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அதேபோல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நடிகைகள் குஷ்பு, திரிஷா நடிகர்கள் விஷ்ணு விஷால், அருண் விஜய், பாடகி லதா மங்கேஷ்கர் என பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் இன்று பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் எனக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பாதுகாப்பாக விதிமுறைகளைக் கடைப்பிடித்த போதிலும் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் வைரஸ் எவ்வளவு வேகமாகவும் உக்கிரமாகவும் பரவுகிறது என்று. கொரோனா என்னை அச்சப்பட வைத்துள்ளது. 

ஆகவே அனைவரும் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் தற்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கிறேன். என்னுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்கள் நிச்சயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். 

இதனால் தொற்று ஏற்பட்டாலும் அதிக பாதிப்பிலிருந்து தப்ப முடியும். நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஆரோக்கியமாக இருக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். நான் விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு வருவேன் என நம்பிக்கை உள்ளது. மீண்டு வந்து மீண்டும் எனது வேலைகளைத் தொடர்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.