×

கதிரவன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவால் காலமானார்..

 


தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் கதிரவன் ஐ.ஏ.எஸ். உடல்நலக் குறைவால் காலமானார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கதிரவன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் வேளாண்மை படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை ஆட்சியராக  தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார்.பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் ஆகிய ஊர்களில்  வருவாய் கோட்டாட்சியராகவும்  (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.  

சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணிபுரிந்த கதிரவன்,  2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பதவியேற்ற இவர்,  பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார்.


இதனையடுத்து  ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது,  கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று கதிரவன் ஐ.ஏ.எஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.  இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதனிடையே  சேலம் டேன்மேக் மேலாண் இயக்குநராக இருந்த கதிரவனுக்கு , அண்மையில் தான்  நெடுஞ்சாலைத்துறையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனராக  அவர் பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.