கரூர் வழக்கு - ஜெனரேட்டர் உரிமையாளர் உட்பட 12 பேர் ஆஜர்
கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான அரசு மருத்துவர்கள், காவல்துறையினர், ஜெனரேட்டர் உரிமையாளர் உட்பட 12 பேர் விசாரணை முடிந்து சென்றனர்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் வருகை தந்து ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் 5 பேர் நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் 5 பேர் , காவல்துறை அதிகாரிகள், ஜெனரேட்டர் உரிமையாளர் ஒருவர், இரண்டு பொதுமக்கள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேர்முக உதவியாளர் உடன் ஆவணங்களுடன் ஆஜராகினார். விசாரணைக்கு பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நேர்முக உதவியாளர் , அரசு மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், மின்விளக்கு மற்றும் ஜெனரேட்டர் உரிமையாளர், பொதுமக்கள் என 12-பேர் விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர்.