×

கலைஞர் உணவகமாக மாறுகிறதா "அம்மா உணவகம்"? - பெயர் பலகையால் எழுந்த சர்ச்சை!

 

தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு கட்சிகள் திமுக மற்றும் அதிமுக. அவ்வாறு வரும்போது திமுக தொடங்கிய திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதும், அவற்றின் பெயரை மாற்றுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கைவந்த கலை. அதற்கு புதிய சட்டப்பேரவை வளாகம் மருத்துவமனையாக மாற்றப்பட்டதே சாட்சி. இவ்வாறு பல திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் அம்மா உணகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூடிவிடுமோ என அதிமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதற்கு ஆரம்பப்புள்ளியாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோதே மதுரவாயலில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை சூறையாடினர் திமுகவினர். சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோவும் வைரலானது. ஆனால் உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் அவர்களைக் கட்சியை விட்டு விலக்கினார். அப்போதே அதிமுக தலைவர்கள் திமுகவின் அராஜங்கள் ஆரம்பித்துவிட்டது என வீடியோவை பகிர்ந்து கண்டனத்தை பதிவு செய்தனர். 

மேலும் அம்மா உணவகங்களை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது எனவும் வலியுறுத்தினர். அண்மையில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின்போது அம்மா உணவகம் வரப்பிரசாதமாக திகழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் இலவசமாக உணவளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதெல்லாம் நேர்மறையான செயலாக இருந்தாலும் அம்மா உணவகத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கான எதிர்மறை செயல்களும் அரங்கேறிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களை நியமித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல தற்போது அந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் படம் பொறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கலைஞர் உணவகம் உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவேளை அதற்கான அடித்தளமாக இந்த மாற்றம் இருக்குமோ என்ற பேச்சும் எழுந்துள்ளது.