×

"பாஜகவுக்கு கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவுடன் தொடர்பு"  - செல்வப்பெருந்தகை கடும் தாக்கு!! 

 

கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியிருப்பது தமிழக பா.ஜ.க. எந்த திசையில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுவதால் சமூக விரோத சக்திகள், கூலிப்படை தலைவர்கள், குற்ற வழக்கில் காவல்துறையினரால் தேடப்படுபவர்கள் ஆகியோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழக பா.ஜ.க.வில் இணைவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. கடந்த 2021 ஜனவரி 20 ஆம் தேதி பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பெரும் படையோடு பா.ஜ.க.வில் இணைந்தவர் கூலிப்படைத் தலைவர் சீர்காழி சத்யா. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த சத்யா பிரபல தாதாவாக கருதப்படுபவர். கோவையை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராமுக்கு வலது கரமாக பல குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். 2017 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் வழக்கறிஞர் ராஜா என்பவரை கொலை செய்த நபர்கள் மூன்று பேரை பொது மக்கள் முன்னிலையில் ஓடஓட வெட்டி படுகொலை செய்தவர் சீர்காழி சத்யா என்று காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருபவர். காவல்துறை என்கவுண்டர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர். தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் சந்தேக நபர்களான 12 ரவுடிகளை அடையாளம் கண்டு அதில் முக்கியமான நபராக சீர்காழி சத்யாவை காவல்துறையினர் தேடி வந்தனர்.

அரசியலில் ரவுடிகளின் ஆதிக்கத்தை அனுமதிக்கிற எந்த இயக்கமும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றியும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்தும் வாய்கிழிய நாள்தோறும் பேசுகிற அண்ணாமலை, கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவது குறித்து என்ன விளக்கம் தரப் போகிறார் என்பதை நாடே எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.