"மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியது பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணம்" - கமல் ஹாசன்
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு கமல் ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று மத்திய அரசால் 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து, விவசாயிகள் இதை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு திரும்பப் பெறாததால் , டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா ,உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சேர்ந்த விவசாயிகள் ,கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்தனர். இதில் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்தோம். ஆனால் அவர்களை இதுவரை சமாதானப்படுத்த முடியவில்லை .இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். எனவே மூன்று வேளாண் சட்டங்களின் திரும்பப் பெறுகிறேன் என்று பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்தும். இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.