×

"அம்மா உணவகங்களை போல் விரைவில் வருகிறது கலைஞர் உணவகங்கள்" - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

 

கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா உணவகம் என்ற சென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது . அப்போது முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த உணவகங்களில் ஏழை எளிய மக்கள். அன்றாட கூலி வேலை செய்பவர்கள். ஓட்டுநர்கள் என பலர் குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு உண்டு வந்தனர். ஒரு ரூபாய்க்கு இட்லி. சாம்பார் சாதம் 5 ரூபாய். தயிர் சாதம் மூன்று ரூபாய் என்று மலிவு விலையில் திறக்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த சூழலில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்  ஏழை மக்கள் பசி தீர முதல்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேசமயம் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தொடர்ந்து அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என முதல்வர் முக ஸ்டாலின்  தெரிவித்தது அதிமுகவினருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது.

குறிப்பாக கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் போது ,  அம்மா உணவகம் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது எனலாம்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் இலவசமாக உணவளிக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார்.  அதேசமயம் சில இடங்களில் அம்மா உணவகங்களை சூறையாடுவது,  அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட சில அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.