#JUST IN : பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!
ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் ஷீலா மேரி. இவர் தனது உறவினரான பிரபு மணி மூலமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங்க காசுகள் வாங்கலாம், வீட்டு மனைகள் குறைந்த விலையில் வாங்கித் தருகிறோம் என பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.
கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பிரபு மணி பெரும்பாலும் ஆய்வாளர் ஷீலா மேரியின் காவல்துறை வாகனத்திலேயே வைத்து, மக்களவைத் தேர்தல் நேரத்தில் தங்கக் காசுகளை வழங்கியுள்ளார்.
இதனால் நம்பிக்கை ஏற்பட்டு மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக போலீஸாரும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தை 2024 இறுதியில் மூடிவிட்டு பிரபுமணி தலைமறைவாகிவிட்டார். இவரிடம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
மொத்தம் ரூ.20 கோடி வரை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக பிரபுமணி மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஷீலா மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார்.நீதிமன்ற விசாரணையின் போது முன் ஜாமின் மனுவுக்கு காவல்துறை தரப்பில் பலத்த எதிர்ப்பு.ஷீலா மேரிக்கு முன்ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை வாதம்.
இந்நிலையில், பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது