×

#JUST IN : தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து..!

 

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி டேம் ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு மாசிலாமணி என்ற தொழிலாளி வழக்கம்போலப் பட்டாசு தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசுகள் திடீரெனத் தீப்பற்றிப் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.

இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளி மாசிலாமணி உடல் கருகிப் படுகாயமடைந்தார். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதில் பட்டாசு கிடங்கு மற்றும் அதன் அருகிலிருந்த கொட்டகைகள் முற்றிலும் எரிந்து தரைமட்டமாகின.

படுகாயமடைந்த மாசிலாமணியை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்துப் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் கவனக்குறைவா அல்லது விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.