"தமிழக அரசு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது"- திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி பரபரப்பு கருத்து
காவல்துறை ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும். காவல்துறை பாதுகாப்புடன் மனுதாரர் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ராம ரவிக்குமார் மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்த பிறகு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை எடுத்துக் கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "நீங்கள் இந்த உத்தரவால் பாதிக்கப்படவில்லை, ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்" என தெரிவித்தார். அரசுத்தரப்பில், "விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். 4 வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "கோவில் தரப்பு அரசு வழக்கறிஞரும், கோவில் செயல் அலுவலரும் நேற்று கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்திருக்கலாம்" என குறிப்பிட்டார்.
அரசுத்தரப்பில், "டெல்டா பகுதிகளில் அதிக மழை. நானும் பக்திமானே. தயவுசெய்து இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும். உணர்வுப்பூர்வமான விசயம் என்பதால், நீதிபதி அதை கருத்தில் கொண்டு, வழக்கை ஒத்திவைக்க வேண்டும். ஏராளமான கூட்டம் கூடியிருக்கிறார்கள்" என தெரிவித்தார். உங்கள் உத்தரவை பார்த்து அதில் ஏதாவது செய்வோம் என அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி குறிப்பிட்டார். தொடர்ந்து, "கோவிலின் செயல் அலுவலரை உடனடியாக காணொளி வாயிலாக ஆஜராக அறிவுறுத்தினார். மேலும், "நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன் என்றும் குறிப்பிட்டார். வழக்கறிஞர் ஜோதி நகையுணர்வுடன் வாதங்களை முன்வைத்து வருவதால் , நீதிபதியும் புன்முறுவலுடன் வழக்கை விசாரித்து வந்தார். செயல் அலுவலர் ஆஜராகாததால், அவர் வருவாரா? இல்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, "காவல் ஆணையரும், மாவட்ட ஆட்சியரும் காணொலி வாயிலாக உடனடியாக ஆஜராக உத்தரவிட்டார். சீருடையில் இல்லையென்றாலும் பரவாயில்லை எனவும் குறிப்பிட்டார். அரசுத்தரப்பில், "அதிகாரிகளை 5 நிமிடங்களில் ஆஜராக வேண்டுமெனில் எப்படி ? என கேள்வி எழுப்பப்பட்டது. செயல் அலுவலரின் நடவடிக்கையே அவரை ஆஜராக உத்தரவிடக் காரணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, "05.30 மணிக்கு ஆட்சியர், காவல் ஆணையர், கோவில் செயல் அலுவலர் காணொலி வாயிலாக ஆஜராகவில்லை என கடுமையான உத்தரவிட பிறப்பிக்க தயங்க மாட்டேன் என குறிப்பிட்டு 05.20 மணிக்கு கீழிறங்கினார்.
பின்னர் 05.30 மணியளவில் காவல் ஆணையர் காணொலி வாயிலாக ஆஜராகினார். அவரிடம் நீதிபதி, "நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா? என கேள்வி எழுப்பினார். ஆணையர் தரப்பில், "பேரிகார்டுகளை அமைத்து 03.30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். கூட்டம் அதிகமாகி பிரச்சனை எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் நடவடிக்கை தொடர்ந்தது" என பதிலளித்தார். அதையடுத்து நீதிபதி, மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இன்று காவல்துறை ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும். காவல்துறை பாதுகாப்புடன் மனுதாரர் தீபத்தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து நாளை 10:30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.