கோயில் விவகாரங்களில் தலையிட்டால் எந்த அமைச்சரும் சாலைகளில் நடக்க முடியாது - மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை..
கோவில் விவகாரங்களில் தலையிட்டால் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என மன்னார்குடி ஜூயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி அப்பர் சப்பரத்தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று களிமேடு பகுதிக்குச் சென்ற மதுரை ஆதீனம், அப்பர் மடத்தினையும், விபத்து நடந்த தேரையும் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மன்னார்குடி ஜூயர் ஸ்ரீ ராமானுஜரும் அவருடன் வந்திருந்தார். அப்போது பேசிய மதுரை ஆதீனம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.
மதுரை ஆதீனத்தைத் தொடர்ந்து பேசிய ஜூயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமானுஜர், பட்டினப் பிரவேசம் என்பது சம்பிரதாயமாக இருக்கக்கூடியது என்றும், அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். அதனை எந்த அரசாங்கமும், எந்த ஒரு இயக்கமும் தடுக்க முடியாது என்று கூறிய அவர், பட்டினப் பிரவேசம் நடந்தே தீரும் என்று தெரிவித்தார். இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோயில் விவகாரங்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசாங்கத்தின் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்..