×

ஜெயலலிதா போயஸ் இல்லம் வழக்கில் இன்று தீர்ப்பு!

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அதிமுக ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டது.  இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்  மற்றும் மகள் தீபா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது தனிநபர் சொத்துகளை கையகப்படுத்துவது என்பது முறையல்ல . இதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என எனவும் வேதா  நிலையத்தை அரசுடமையாக்க கூடாது எனவும் தீபா மற்றும் தீபக் தரப்பில் வாதிடப்பட்டது. அத்துடன் இந்த வீட்டுக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அளவீடு நிர்ணயித்தது தவறு என்றும் வாதிடப்பட்டது.

ஆனால் அப்போதைய அரசு,  ஜெயலலிதா நினைவிடத்தை கையகப்படுத்துவதற்கு முன்பு அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டதாகவும்,  அதன்பிறகு தான் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை,  நினைவு இல்லமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும்,  அரசியல் ரீதியாகவும்,  தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சனைகளை ஜெயலலிதா எதிர்கொண்ட போது தீபா, தீபக் பக்கபலமாக இல்லாமல் தற்போது வந்து உரிமை கொண்டாடுகின்றனர் என்றும் வாதிடப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லமாக  மாற்றும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது . இன்று பிற்பகல் 2. 15 மணிக்கு நீதிபதி சேஷசாயி இன்று தீர்ப்பு வழங்குகிறார்.