தவெக தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்..!
அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் நடிகர் விஜய் ஈரோட்டில் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஈரோடு உரையில் விஜய், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களை குறிப்பிட்டதுடன், திமுகவை ‘தீய சக்தி’ என விமர்சித்து, அந்த சக்தியை வீழ்த்தவே ‘தூய சக்தி’யாக தவெக வந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனி அடையாளமும் கொள்கை தெளிவும் இருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படை இல்லாதவர்கள் தற்போது அரசியல் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.எம்ஜிஆர் என்ற முகமூடியை அணிந்தால்தான் மக்களைச் சந்திக்க முடியும், வாக்குகளைப் பெற முடியும் என நினைப்பது அவர்களிடம் தனிச்சிறப்பு இல்லை என்பதையே காட்டுகிறது” எனக் கூறினார்.
மேலும் அவர், “எம்ஜிஆர் முகமூடியை அணிந்தாலும், ஜெயலலிதா அல்லது அண்ணா முகமூடியை அணிந்தாலும், அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது. வரலாறு இதற்கு சாட்சி. தனித்த அடையாளம் இல்லாததால்தான் எங்கள் தலைவர்களின் பெயர்களையும் உருவங்களையும் பயன்படுத்துகிறார்கள்” என்றார்.
விஜய் பேச்சு குறித்து தொடர்ந்து விமர்சித்த ஜெயக்குமார், “பொத்தாம் பொதுவாக பேசுவது எளிது. நானும் அப்படிப் பேச முடியும். ஊர்க் குருவி எவ்வளவு உயரப் பறந்தாலும் பருந்தாகாது. களத்தில் நிலைபெறாதவர்கள், ஆலமரமாக வளர்ந்த அதிமுக இயக்கத்தைப் பற்றி பேசக்கூடாது. பலருக்கு அரசியல் நிழல் கொடுத்த இயக்கம் அதிமுக. முதலில் அரசியல் அடிப்படைகளைப் படித்துவிட்டு வாருங்கள்” எனத் தெரிவித்தார்.