×

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - குவிந்த திமுக தொண்டர்கள்!!

 

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி வீடு அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத் உள்ளிட்ட ல் இடங்களில் சோதனை நடைபெற்ற வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உட்பட திமுக நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர். அத்துடன் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருவதால் மேயர் கவிதா கணேசன் தலைமையில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டமும் ரத்து செய்யப்பட்டு வருகிற 29ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் உள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில் ஆளுங்கட்சி அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  கிளப்பியுள்ளது.