ஆட்சியை நடத்துவது துர்கா ஸ்டாலினா? கொந்தளிக்கும் வ.கவுதமன்
எங்கள் கையில் துர்காவே இருக்கிறார்கள் என்று மிரட்டுகிறார்கள். அப்படி என்றால் அரசாங்கத்தை யார் நடத்துவது? யார் யாருக்காக மிரட்டுவது என்று கொந்தளித்திருக்கிறார் திரைப்பட இயக்குநரும் தமிழ்ப்பேரரசு கட்சியின் நிறுவன தலைவருமான வ. கௌதமன்.
கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு கொடுத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்து தமிழர்களையும், அங்கு செல்லும் பெண்களையும் அடித்து அவமானப்படுத்தி வருகின்றார்கள்’’ என்று குற்றம்சாட்டினார்.
அவர் மேலும், ‘’வரலாற்று சிறப்புமிக்க கோவிலை சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகின்றார்கள். இப்போது கூட பெண்கள் சென்றால் அவர்களை அடித்து அவமானம் செய்கின்றார்கள். ஆண்கள் சென்றால் அவர்களை வேறு மாதிரி நடத்துகின்றார்கள். சிதம்பர ரகசியத்தை காட்டி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அது காட்டப்படவில்லை. இப்போது நடராஜர் சாமி அங்கு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்திருக்கிறது’’ என்கிறார்.
தொடர்ந்து பேசிய கவுதமன், ‘’ திருச்சிற்றம்பல மேடையில் தமிழர்களை ஏற்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகின்றன. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே நந்தனார் நடந்து வந்த பாதையான தெற்கு வாசலை அடைத்து தீண்டாமைச் சுவரை எழுப்பி வைத்திருக்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலிலேயே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டு இருக்கிறது என்றால் அதை அவர்கள் அடைக்கிறார்கள் என்றால் அரசாங்கம் அகற்றுமா? அல்லது நாங்களே அகற்ற வேண்டுமா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்.
’’ தீட்சிதர்களின் இந்த அட்ராசிட்டியை தட்டி கேட்பவர்களிடம் எல்லாம், எங்கள் கைகள் துர்காவை இருக்கிறார்கள் என்று மிரட்டுகிறார்கள். துர்கா என்பது முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய மனைவியை தான் அவர்கள் சொல்கிறார்கள். எங்கள் கையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள் என்றால் அப்படி என்றால் அரசாங்கத்தை யார் நடத்துவது? யார் யாருக்காக மிரட்டுவது? இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இல்லை என்றால் போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்துள்ளார் .