சுங்கச்சாவடி அருகில் உள்ளவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது உண்மையா..? NHAI விளக்கம்..!
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தநிலையில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி கடந்து செல்லலாம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளூர் வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது தவறான கருத்து. உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் கிடையாது.
ஆனால் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளூர் மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது.
சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் செல்லலாம் என்று கருத வேண்டாம்.
சலுகை பெற விரும்புவோர் அந்த சுங்கச்சாவடியின் விதிகளைப் பின்பற்றி முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.