கொரோனா இல்லையா… மறைக்கப்படுகிறதா? – கொங்கு மக்கள் பீதி
தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு அறிவித்து வருவது நம்பும்படியாக இல்லை. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மார்ச் சென்னை, காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதாக முதன்முதலில் செய்தி வெளியான நிலையில், ஈரோட்டு மாவட்டத்திலும் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. எதற்கு ஈரோடு மாவட்டத்துக்கு தடை என்று பலரும் குழம்பியநிலையில்தான் அங்கு மிகப் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இத்தனை நாட்களாக தமிழக அரசு இதை மறைத்ததா என்ற கேள்வி எழுந்தது. அதன்பிறகு மாநிலம் முழுக்க கொரோனா தொற்று ஏற்படவே ஈரோடு மாவட்ட விவகாரம் மறந்தே போனது.
இதற்கு ஆதாரமாக ஈரோடு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றனர் பலரும். ஈரோடு மாவட்டத்தில் அரசு கணக்குப்படி 70 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஒன்றரை லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களில் 3000 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா ஒழிக்கப்பட்டுவிட்டது என்று பாராட்டு விழா நடத்தி வருகின்றனர். மீதம் 1.47 லட்சம் பேருக்கு கொரோனா இல்லை என்று எப்படி உறுதி செய்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்கின்றனர்.
கோவை கொங்கு மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, தினமும் எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்ற தகவலை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உண்மையிலேயே கொங்கு மண்டலத்தில் கொரோனா அழிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியே… அதே முறையைப் பின்பற்றி தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குறிப்பாக சென்னையில் ஏன் ஒழிக்க முடியவில்லை என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.