×

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்துக.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு.. 

 

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்  என்று  அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.  

தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து சாலைகள் அடைப்பு, போக்குவரத்து தடை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்களில் அதிகரிப்பு, மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.  சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.