×

தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் - தமிழக அரசு முறையீடு

 

புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தனி நபர் பயன்பாட்டுக்கு நான்கரை லிட்டர் மதுவை வைத்திருக்க தமிழக அரசின் விதிகள் அனுமதிக்கும் நிலையில், புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு லிட்டர் 680 மில்லி மதுபானத்தை வைத்திருந்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த செய்தி புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நான்கரை லிட்டர் வரை மதுபானம் சொந்த பயன்பாட்டிற்காக கொண்டு வரலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா, நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள “நான்கரை லிட்டர்” என்ற வரம்பு குறித்து தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மதுபானங்களை 4.5 லிட்டருக்குக் குறைவாக வைத்திருப்பதற்கான விலக்கு என்பது TASMAC மற்றும் உரிமம் பெற்ற கடைகள் மூலம் அல்லது அரசின் அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாநில அரசு அங்கீகரிக்காத பிற மாநில மதுபானங்கள்,  மிகக் குறைந்த அளவில் இருந்தாலும், அதனை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும் என அரசு தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். எனவே, இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் பொருட்டு வழக்கை நாளை விசாரிக்க வேண்டுமென கோரப்பட்ட நிலையில், நீதிபதி நிர்மல் குமார்  நாளை விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.