×

“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது" - பிரதமர் மோடி உரை..!!

 


“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது” என  சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.  

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில்  12வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.   பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம்.

பாலைவனங்களாக இருந்தாலும் சரி, இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, கடலின் கரைகளாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது: நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். 1947-ம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடனும், எண்ணற்ற ஆயுதங்களின் வலிமையுடனும், நமது நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன.
 
மதிப்பிற்குரிய மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி, அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் ஒரு மிக முக்கியமான பொறுப்பை நிறைவேற்றினர். கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நின்று, நமது பாதையை ஒளிரச் செய்து வருகிறது,

இந்த சுதந்திர தினத்துக்காக செங்கோட்டையில் கூடியிருக்கும் 'மினி இந்தியா'வை நான் காண்கிறேன். நமது துணிச்சலான வீரர்களின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன். ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள், எதிரிகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட பலத்துடன் பதிலளித்தனர். ஏப்ரல் 22-ம் தேதி, எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதத்தை கேட்ட பிறகு கொன்றனர். இதனால் முழு தேசமும் கோபமடைந்தது.

அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால், அது இனி பொறுத்துக் கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் தங்கள் விருப்பப்படி, அவர்கள் விரும்பும் நேரத்தில், அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதன் மூலம் பதிலடி கொடுக்கும். பொருத்தமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.

பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவற்றை இறக்குமதி செய்வதை இந்தியா குறைக்கவேண்டும். மற்றவர்களை சார்ந்திருப்பது ஆபத்தானது. தற்சார்பு என்பதே இந்தியாவின் முழக்கம். டாலர்கள், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல. எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா தற்சார்பு அடைய வேண்டும்.  

சிந்து நதி நீரை முழுமையாக பயன்படுத்தும் உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமேஉள்ளது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.  எதிரி நாட்டு விவசாய நிலங்களுக்கு நமது தண்ணீர் கிடைக்க கூடாது. அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். 

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விண்செளி சார்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உள்ளன. 

கடந்த சில நாட்களாக, இயற்கை பேரழிவுகள், நிலச்சரிவுகள், மேகவெடிப்புகள் மற்றும் பல பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்கள். மீட்பு நடவடிக்கைகள், நிவாரண முயற்சிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் முழு பலத்துடன் இணைந்து செயல்படுகின்றன” என்று கூறினார்.