ராணி மேரி கல்லூரி வளாகத்தில் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலை திறப்பு
சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் மே 7, 1861 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். அவர் கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், கல்வியாளர் என்ற பன்முகத்திறன் கொண்டவர்.எழுத்தாளர், இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1913-ல், அவரது கவிதைத் தொகுப்பான 'கீதாஞ்சலி' படைப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்று, ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பெற்றார். அனைவராலும் 'குருதேவ்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இயற்றிய "ஜன கண மன" பாடல் இந்தியத் திருநாட்டின் தேசிய கீதமாக விளங்குகிறது. 1919ல் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து, இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஆங்கிலேய அரசு வழங்கிய 'சர்' பட்டத்தைத் துறந்தார்.