×

"பரலோகம் போவீர்கள்" என்று சாபமிடுவது எந்த விதத்தில் நியாயம்?- இபிஎஸ்க்கு அன்பில் மகேஷ் கேள்வி

 

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இன்று திமுக வேட்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “இன்றைய அரசியல் களம் அதன் நாகரிகத் தன்மையை இழந்து வருவதை மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோல்வி பயம் வந்துவிட்டால் ஒரு மனிதர் எதை வேண்டுமானாலும் பேசலாமா? கொரோனா காலத்தைப் பற்றிப் பேசும் எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் மட்டும் கொரோனாவை விரட்டியடிக்கவில்லை என்றால், இன்றைய முதலமைச்சர் இந்நேரம் பரலோகத்திற்குச் சென்றிருப்பார்" என்று மிகவும் கீழ்த்தரமாகவும், மலிவான அரசியலோடும் பேசியுள்ளார். இத்தகைய பேச்சுக்களுக்குப் பின்னால் இருக்கும் பதவி வெறி கண்டிக்கத்தக்கது. மக்கள் எங்களை நம்பி வாக்களித்த காரணத்தால்தான், இன்று எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். நிர்வாக ரீதியாக நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதைச் சுட்டிக்காட்டுவதுதான் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு. அதை விடுத்து, முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் தனிப்பட்ட முறையில் "பரலோகம் போவீர்கள்" என்று சாபமிடுவது எந்த விதத்தில் நியாயம்? இத்தகைய வன்மமான பேச்சுகள் அவரின் அதிகார மோகத்தையே காட்டுகின்றன.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல் துறை தன் வசம் இருந்தும், "டிவியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்" என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்தவர் அவர். நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாணவச் செல்வங்களை நாம் இழந்திருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒருமுறையாவது "தமிழகத்திற்கு நீட் வேண்டாம்" என்றோ, "மும்மொழிக் கொள்கையைத் திணிக்காதீர்கள்" என்றோ பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியது உண்டா? அண்ணா பெயரில் கட்சி வைத்துக்கொண்டு, அவர் காட்டிய இருமொழிக் கொள்கையைக் காக்க இவர்களால் முடிந்ததா? மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, இங்கே முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாகக் கொட்டுகிறார். மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, இத்தகைய அவதூறு அரசியலுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் மோதத் தயார், ஆனால் கீழ்த்தரமான அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்” என்றார்.