×

தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்..!

 

மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க. அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க.. இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள். அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் 2014-ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.

அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க. இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க. அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? தப்பித்தவறிக்கூட தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி.

இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான். இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா என்.டி.ஏ.-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!" என்று பதிவிட்டுள்ளார்.