பெட்ரோல் விலையை உயர்த்தாவிட்டால் அடுத்த வாரமே கச்சா எண்ணெய் வாங்க முடியாது! - ஷாக் கொடுத்த மத்திய இணையமைச்சர்..!
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "பெட்ரோல் விலை உயர்வு எல்லா இடத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரியும். முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இரண்டு மூன்று மாதங்களாக அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது விலை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை.
நம்ம ஊர் மக்கள் இந்த விலை உயர்வு பற்றி தெரிந்தவுடன் முடிந்த அளவுக்கு செலவுகளை கட்டுப்படுத்தி கொள்கின்றனர். எவ்வளவு நாட்களுக்குள் யுத்தம் முடியும் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் பிரார்த்தனை செய்வோம். எப்படியாவது முடியட்டும்" என்றார்.
150 ரூபாய் வரை பெட்ரோல் விலை உயருமா? என்ற கேள்விக்கு, "அவ்வளவு விலை உயரும்என்றெல்லாம் பயமுறுத்தாதீர்கள். அதை கட்டுப்படுத்துவதற்கு தான் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். பெட்ரோல், டீசலின் மறுபக்கத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்த விலை உயர்வை ஏற்றாமல் இருந்தால், ஒரு வாரத்திற்குள் கையிருப்பு இல்லாமல் போய், கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் போகும் நிலை வந்தால் என்ன ஆகும்? அனைத்தையும் இந்த அரசு சமாளித்து வருகிறது. மாநிலங்களின் வழியாக அடுத்த மாநிலத்திற்கு எரிப்பொருள்களை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து இன்று ஆய்வு நடக்கிறது.
இந்தியாவிற்கு போதுமான கச்சா எண்ணெய் வருகை இருக்கின்றதா? என்ற கேள்விக்கு, "குறைகள் இருக்கின்றன. அதனை ஈடுசெய்து கொண்டு செல்லக்கூடிய நாடு இந்தியா மட்டுமே" என்றார்.
தமிழகத்தில் பாஜக வளரவில்லையே என்ற கேள்விக்கு, "பாஜக வளர நேரம் கொடுங்கள். அது வந்து தான் ஆக வேண்டும். இயற்கையாக வளர்வதற்கு நாட்களாகும். கேரளாவில் 1-இல் இருந்து ஜீரோவுக்கு சென்றோம். இப்பொழுது 3 இடங்களில் வென்றிருக்கிறோம். இது 30 ஆக வரும். எங்களுக்கு தெரியும். படிப்படியாக வளர்கிறோம்" என்றார்.