"ஆறு மாதத்திற்கு ஒருமுறை நண்பர்களைச் சந்திப்பேன்!" – நட்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..!
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதில் பேசிய நடிகர் ரஜனிகாந்த், ''கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து நீங்கள் எல்லோரும் சந்தித்து இருக்கிறீர்கள். பழைய நண்பர்களை பார்க்கும் போது உங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும்.
இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரிய ஆட்களாக மாறியிருக்கிறார்கள். பெரிய இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (ETV Bharat Tamil Nadu)முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இங்கு படித்திருக்கிறார்கள். என்னுடைய சம்பந்தி வணங்காமுடியும் இங்கு படித்தவர் தான்.
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு செய்துள்ள சர்வீஸ் சதாரணமான ஒன்று கிடையாது. தமிழக காவல்துறை எப்போதும் அதை மறக்காது. துணிச்சலாக அவர் செய்த பணிகள் அசாத்தியமானது. சைலேந்திரபாபுவின் அந்த ஃபிட்னஸ் எனக்கு பிடிக்கும். சினிமா ஹீரோக்கள் கூட அந்த மாதிரி இருக்க மாட்டார்கள்.
இதே போல முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புவின் அறிவு ஆழமானது. அவருக்கு தெரியாத விஷயங்களே இருக்காது என்று சொல்லலாம், அந்த அளவிற்கு எல்லா விஷயங்கள் பத்தியும் அவர் பேசுவார். இவர் தலைமைச் செயலாளராக இருந்த போது நிறைய பணிகள் செய்திருக்கிறார். அவரைப் போல ஒரு மென்மையான மனிதரை நான் பார்த்தது இல்லை. எனக்கு பல விதமான முறைகளில் உறவினர்கள் இருந்தாலும், நண்பர்களை பார்க்கும் போது புத்துணர்வு ஏற்படும். நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியானதாக இருக்கும்.
நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை எனது நண்பர்களை சந்திப்பேன். சிவாஜி என்ற பெயரை நான் மறந்து விட்டாலும், அவர்கள் (நண்பர்கள்) அந்த பெயரை வைத்து கூப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்'' என பேசினார்.
பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நடிகர் ரஜனிகாந்த் வீடியோ மூலம் வாழ்த்தி பேசியது முன்னாள் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி்யது.