×

  எனக்கு இந்த பதவியில் விருப்பம் இல்லை -  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..

 

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தெரிவித்துள்ளார்.  

அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்,  திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றார்.  இதனைத்தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் சட்டமன்ற உறுப்பினராக (MLA) பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். 

அதன்பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எல்லோரும் கலந்து கொண்டார்கள். காங்கிரஸ் கொறடா விஜயதரணிக்கு தனியாக ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து அதற்கான வருத்தத்தையும் தெரிவித்து, அடுத்தமுறை மீண்டும் பதவியேற்கும் சந்தர்ப்பம் வந்தால் அவரை தனியாக சென்று கூப்பிடுவேன்.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்கனவே செல்வப்பெருந்தகை இருக்கின்றார். வயதில் சிறியவராக இருந்தாலும் அவரை பொருத்தவரை மதச்சார்பற்ற முறையில் ஜாதி பாதகங்களை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு இளைஞர். அவரது செயல்பாடுகள் கடந்த 20 மாதங்களாக நல்லபடியாக இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் அவரே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றேன். எனக்கு சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை. ” என்று குறிப்பிட்டுள்ளார்.