“வராத எதிர்க்கட்சித் தலைவருக்கும் என் நன்றிகள்” - சட்டமன்றத்தில் அரசியல் நாகரிகம் காத்த முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் (16-வது பேரவை) எட்டாவது கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று (20-2-2026) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசியதாவது: பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 5 ஆண்டுகளில் பேரவைத் தலைவராகப் பணியாற்றும் நீங்கள் அமைதியாகவும், கண்ணியத்தோடும் அதேநேரத்தில் கட்டுப்பாட்டோடும் தங்களுடைய ஆற்றலால் இந்தப் பேரவையைச் சிறப்பாக நடத்திச் சென்றிருக்கிறீர்கள். அதற்காக என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதோடு, இந்தப் பேரவையில் பெரும்பான்மை இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர் என்கிற முறையில் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுக்குத் துணையாக நின்று, பேரவையின் துணைத் தலைமைப் பொறுப்பை ஏற்று, அமைதியாக, சிறப்பாகப் பேரவையை நடத்தும் பேரவைத் துணைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள், நன்றிகள். இப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறக்கூடிய நேரத்தில், கருத்து மோதல்களை எதிர்கொண்டு, கட்சி வேறுபாடுகள் வெளிப்படுகையில் தன்னுடைய அனுபவத்தினாலும், அபார நினைவாற்றலாலும் அமைதிப்படுத்தக்கூடியவர், பேரவையின் மூத்த உறுப்பினர் அவை முன்னவர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்கள். அவர் தற்போது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைந்து உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகள்.
குறைகளைச் சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்குச் சிறகுகளைத் தரக்கூடியவர்கள்" என எண்ணிச் செயலாற்றுபவன் நான். அரசுக்குத் தக்க யோசனைகளைக் கூறுவதிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்றைக்கு (நேற்று) வரவில்லை. இருந்தாலும், அவருக்கும், மற்றுமுள்ள கட்சித் தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கெல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், அன்போடும் பாசத்தோடும், என்றென்றும் என்னிடத்திலே உரிமையோடு அன்புகாட்டி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.