கிளாம்பாக்கத்தில் கைகலப்பு! மனைவியை ஹெல்மெட்டால் தாக்கிய கணவன்
கிளாம்பாக்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக புகார் அளிக்க வந்த கணவன் - மனைவி இருவரும் காவல் நிலையம் முன்பே தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், இது குறித்து புகார் அளிப்பதற்காக இருவரும் கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, காவல் நிலையத்தின் வாசலிலேயே இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் பொது இடமென்றும் பாராமல் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த மோதலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.