வீட்டின் வெளியே பூட்டி தீ வைத்த மர்ம நபர்கள்- கணவன், மனைவி உடல் கருகி பலி
செங்கம் அருகே விவசாய நிலத்தில் தம்பதி தங்கியிருந்த குடிசைக்கு தீ வைத்த சம்பவத்தில் இருவரும் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (50). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சர்தார் என்பவருக்குச் சொந்தமான, ஏரிக்கரை ஓரம் உள்ள சுமார் மூன்று ஏக்கர் விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். சக்திவேலுக்கு தமிழரசி என்ற முதல் மனைவியும், மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். தமிழரசி தனது பிள்ளைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சக்திவேல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தாண்டபட்டு பகுதியைச் சேர்ந்த அமிர்தம் (45) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அமிர்தத்திற்கும் ஏற்கனவே திருமணமாகி இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்த அமிர்தம், சக்திவேலுடன் இணைந்து அவர் பயிரிடும் விளைநிலத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு சக்திவேல் மற்றும் அமிர்தம் ஆகிய இருவரும் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், குடிசையைத் தப்பிக்க முடியாதவாறு வெளிப்பக்கமாகப் கதவை பூட்டிவிட்டு, அதற்குத் தீ வைத்துள்ளனர். தீ மளமளவெனப் பரவியதில், வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட சக்திவேல் மற்றும் அமிர்தம் ஆகிய இருவரும் வெளியே வர முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகள் யார்? முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.