×

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.50,000; வாரிசுகள் நிவாரணம் பெறுவது எப்படி?

 

சென்னை ஆட்சியர் விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்யும்பட்சத்தில் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உள்ள பதிவுகளின்படி 8,348 நபர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர். இதுவரை வருவாய்த் துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டும், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்தும் 6,888 விண்ணப்பங்கள் இணைய வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதில் அனைத்து ஆவணங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட 3,638 நபர்களுக்கு ரூ.50,000 ஆன்லைன் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விவரம் https://chennai.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் வாரிசு மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் காரணமாகவும், முழுமையான முகவரி இல்லாததனாலும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், வேறு முகவரிக்குக் குடிபெயர்ந்து சென்றதாலும், மக்கள் பதவியேற்றம் செய்த விண்ணப்பங்களில் முழுமையாக மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்காததாலும் அரசு வழங்கும் நிதி உதவியை வழங்க இயலாத நிலை உள்ளது.

எனவே கொரோனா உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆட்சியர் அலுவலக 7வது மாடியிலுள்ள பேரிடர் மேலாண்மைப் பிரிவிலோ அல்லது 1077 எண்ணையோ அல்லது கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களைத் தொடர்புகொண்டோ கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆவணம், மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள், மயானச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரம் போன்ற முழுமையான ஆவணங்களுடன் தாக்கல் செய்து ரூ.50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) நிதி உதவியினைப் பெறலாம்.

18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரை இழந்தோர்; அல்லது இருவரையும் இழந்தோர்; முறையே ரூ.3,00,000/- மற்றும் ரூ.5,00,000/- பெற்றவர்களும் மேற்படி ரூ.50,000/- பெறத் தகுதியுடையவர்கள் என்பதால் அவர்களோ அல்லது அவர்களது பாதுகாவலர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.