×

வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு- ரவுடியின் 10 விரல்களும் துண்டானது

 

 

மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி  நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது  விபத்து 2 கைகளின் 10 விரல்களும் துண்டாகி சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
மயிலாடுதுறை அருகே  தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் கலைவாணன்(40). அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள 10 விரல்களும் துண்டாகி சிதறியது. மேலும், மார்பு, தொடைகளிலும் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கைகளிலிருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறியபடி இருந்தது. அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கலைவாணன் கூறுகையில், மர்ம நபர்கள் மூன்று பேர் வீசிய வெடிகுண்டுகளை கையால் பிடித்து அப்புறப்படுத்தியபோது, அவைகள் வெடித்து தனது கை விரல்கள் துண்டானதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

கலைவாணன்  என்கவுன்ட்டரால் சுட்டுக் கொல்லப்பட்ட மணல்மேடு ரவுடி சங்கரின் கூட்டாளி, 2007ல் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டிகலைச்செல்வனை வெடிகுண்டுவீசி வெட்டிக் கொன்ற வழக்கு, 2013ல் மயிலாடுதுறை நல்லாசிரியர் நீலகண்டன் கொலை வழக்கு உட்பட  4 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட பல மாவட்டங்களில்  20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.