×

இந்த மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து 260 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 

இது புயலாக வலுப்பெறாமல், நாளை காலை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும். தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அதி தீவிர கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் நாளை ஒரு நாள் மட்டும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதே போல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், நெல்லை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.