எதிர்ப்புக்கு பணிந்து இந்தி பெயர் நீக்கம்
திருச்சி கோட்ட ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இருந்த இந்தி பெயருக்கு முதல்வர் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், எதிர்ப்புக்கு பணிந்து அந்த பெயர் நீக்கம் செய்யப்பட்டது.
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும், இந்தியிலும் எழுதியுள்ளனர். இந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு ஹிந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என ஒன்றிய அரசையும் ரயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதல்வர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குரல் கொடுத்தனர். திமுகவினர் இன்று மதியம் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
கல்வெட்டில் இருந்த ஹிந்தி எழுத்தை கருப்பு மைகொண்டு அழித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தொடர்ந்து எழுந்த கண்டனங்கள், போராட்டங்களை தொடர்ந்து இந்தி பெயர் பலகையை மாற்றப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து அங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி வடிவில் எழுதப்பட்டிருந்த இந்தி வார்த்தை அகறப்பட்டது. அங்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.