நீலகிரியில் தொடரும் கனமழை : 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை..
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, குன்னூர், கூடலூர் வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவும் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நீலகிரியில் கனமழை பெய்ததால் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த 4 நாட்களாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுக்கா பள்ளிகளிக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று கனமழை காரணமாக உதகை, குந்தா, குன்னூர், கூடலூர் ஆகிய 4 வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.