×

வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இன்று 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

 

 தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்கக்கடலில் வட தமிழக கடலோர பகுதியிலிருந்து 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன் காரணமாக தமிழகத்தில்  இன்று  டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  மேலும் தமிழகத்தில் அடுத்த 4  நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.  
 
அதன்படி இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரி காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், நாளளை  தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில்  மிக கனமழை பெய்யும் எனவும்  அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம்  கூறியுள்ளது.

வங்கக்கடல் மன்னார் வளைகுடா  மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று கூறியுள்ளது.  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மணடலம் காரணமாக நாளை வரை மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு  மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.